Saturday, September 1, 2007

தேசமும் கவிதையும்


அன்றோர் தினத்தின்
கதிரவன் எழ முன் - ஒரு
கதிரவன் விழுத்தப்பட்டான்...
மேற்கில் அல்ல...;
வீட்டு வாசலில்...!

பல்லாயிரம் தடவைகள்
நான் கடந்து சென்ற வாசல்
பல நூறு த்டவைகள் தரித்து,
சல்லாபித்த மாலைப்பொழுதுகள்....

நம் கதைகளினைக் கேட்டு
மெளனமாய் சிரித்த மதகு...
எங்கள் இருப்பில்
அது மலர்ந்தது...;
எங்கள் தரிப்பில்
அது தலை நிமிர்ந்தது....

கடந்து தான் போயிற்று,காலம்
கைகளில் பிடிபடாமல்,
நழுவி விழுந்து
நெடு தூரம் போகிறது...!

நேற்றுப்போல் இருக்கிறது
நினைவுகளின் ஈரம்
நெருடல் நிறைந்த
நெஞ்ச வெளிகளில்
வேர் எறிந்து,
நினைவுகள் மட்டும்
முளைத்துக்கொண்டே
இருக்கின்றன....!
செத்துக்கொண்டேயிருக்கிறது
நிஜம்...!!

'சந்திப்போம்' சொல்லி
பிரிந்த பொழுதொன்றில்
சிந்திக்கவே இல்லை;
சந்திக்கவே முடியாத
தலைவிதி பற்றி...!

என் இதயம் பூத்த
தெருவில்,
என் கனவுகள்
கருக்கொண்ட பொழுதில்..,
என்னோடு இருந்தாய் அருகில்.... !

அதே தெருவில்
நீ சுமக்கப்படுகையில்,
நான் நடக்கிறேன் அருகில்.... !!

அன்றோர் பொழுதில்
கதிரவன் ஒருவன்,
கடிதம் சாட்சியாய்
கடவை தான்டினான்...!
இன்னும் பல சூரியன்கள்
வெளியேறிப்போயின... !!

இன்றோர் கதிரவன்
இல்லம் முன்பே
விழுத்தப்பட்டான்...!

இதோ...
கையாலாகாத ஒருவன்
எழுதிக்கொண்டே இருக்கிறான்
கவிதை....
வேறென்ன சொல்ல...?
இயலாமை தானே
இப்படிப் பூக்கிறது....!!