Saturday, August 30, 2008

பட்டம்-விடுகதை..!


கண்ணை எழில் பறிக்க,
கதிர் மெல்லத் தெறித்துப்பளபளக்க
காற்றில் அசைந்தெழுந்து-தென்னம்
கீற்று மறைவினில் முகம் மறைத்து,
கீழ்த்திசை வான் விளிம்பில்-உந்தன்
கோலம் அது கண்டு நான் ரசித்தென்....!


பாட்டின் அடியிடையே ஒரு
பல்லவி சரணத்தின் முடிவினிலே
ஏற்றம் இறக்கமுடன் குரல்
கூட்டி இசை தரும் பாடகன் போல்
கூவிப்பறந்திருந்தாய்-அந்த
கூவல் எனக்கென நான் நினைத்தேன்...!


குஞ்சங்கள் செட்டைகளாய்-விண்
கூவிடும் ஒலியொரு பெண் குரலாய்
நன்செய் நிலமதன் மேல் - நல்ல
நாட்டியம் செய்திடும் தாரகையாய்
காற்றில் மிதந்திருந்தாய்-என்
கண் வழியெ என்னுள் நீ விழுந்தாய்...!



எந்தன் உடமையில்லை-பட்டம்
ஏற்றியோன் பெயரும் எனது இல்லை..;
கந்தன் வயலினிலொ அதைக்
கடந்து கிடக்கும் தெருவினிலோ
எங்கோ இருந்து வரும் இந்த
நூலின் மூலம் தெரியவில்லை....!!



பத்துப் பல நாளாய்-என்
படலையின் மேல் உள்ள வான் வெளியில்
குத்தியெழுந்து எனை
கூவி அழைப்பது போல் உணர்ந்தேன்...!!
பார்த்து இரசித்திருந்தேன்; பட்டம்
பொன் எழிலில் நான் எனை இழந்தேன்...!!!


காற்றின் மிடுக்கினிலே - பல
நாள்கள் பறந்து பழகியதால்
காணும் என உணர்ந்தோ, பட்டம்
கயிற்றை அறுத்து விழுந்தது காண்....!!
சேற்று வயல் புறத்தே-நல்ல
நாற்று நட வந்த ஓர் மனிதன்
தோழில் விழுந்தது போய்
அதை தூக்கி அவனும் முன் நகர்ந்தான்...!


ஏற்றியோன் யானுமில்லை-அதை
ஏற்கும் உரிமை ஏதும் இல்லை...;
இருந்தும் வலிப்பது ஏன்..? ஏதோ
இழந்தது போல் உள்ளம் தவிப்பது ஏன்?

Friday, August 15, 2008

வெற்றிகளின் வேர்கள்.....


வாழ்க்கை என்பது
வரமா, சாபமா
தெரியவில்லை...;
ஒவ்வோர் உயிரியும்
எதற்காகவோ
போராடியபடி.....

சிகரம் கட்டி
நிமிர்ந்து நிற்கும்
நூற்றுக்கணக்கான
வெற்றிகளின் காலடியில்
புதைக்கப்பட்ட
கோடிக்கணக்கான
தோல்விகளின்
முகவரிகளைத் தொலைத்தபடி
நகர்கிறதுகாலம்....

முயற்சித் தூண்களால்
முற்றாக்கப்பட்ட
பாசறைகளின் உச்சியில்
வெற்றிக்கொடியின்
வீரத்தாண்டவம்...!

கல்லறைகளின்
ஆழத்திலிருந்துவரும்
தோல்வியின் கதறல்கள்...,
தமக்கு மட்டும்
காலம் பொய்த்ததாகவும்
கடவுள்
கண் மூடியதாகவும்...

முப்பதாவது காதலில்
வெற்றி கொண்டவனைப் பார்த்துப்
பெரு மூச்சுவிடுகிறான்
முதற் காதலில்தோற்றவன்...!!!