Wednesday, July 25, 2007

நதிமூலம்......







"போரும்
கருக்கொண்டு,
தேசம்
நெருப்புண்டு
குருதி கலந்த
அருவிகளும்
கரும் சாம்பல்
சிதறிய
தெருக்க்ளும்
உருக்கொண்ட
பொழுதுகளில்....

அம்மா பொட்டிழந்து,
அக்கா கற்பிழந்து,
அண்ணா காலிழந்து,
தாய் வயிற்றில்
கருக்கொண்ட
உருவினை
வெறுப்புடன்
எதிர்பார்த்திருந்த
பொழுதுகளில்....

பச்சைப்
பாணைக்கோதி,
மண் கலந்த
பருப்பை விட்டு
பட்டும் படாததுமாய்
வாய்களில்
திணித்திருந்த
பொழுதுகளில்....

பச்சை தண்ணீர்க்காய்
பகல் முழுதும்
வரிசை செய்து,
பொழுது முடியும் வேளை
தாகமடக்கிய
பொழுதுகளில்.....

குவித்த மண்ணில்
தலை வைத்து
குறையாய் உறங்கிய
பொழுதுகளில்.....

விடியலில்
சேவல்களுக்கு பதிலாக
காவலரின்
கணைகள் முழங்கிய
பொழுதுகளில்.....

அந்தரங்கம்
அற்றுப் போன
ஒரு அகதிமுகாமில்...."

எப்படிச் சொல்வது
இத்தனை நீளமாய்....?
தலைநகரில்,
அடையாள அட்டையை
புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில்
கேட்கிறாய் சோதரா...,
"பிறந்தது...........?"

Sunday, July 22, 2007

காலம்.....


நிலவின்
கறைகளைக் காட்டி
குழந்தை கேட்டது....
'அது என்னம்மா?'
'பெரிய ஒரு தாச்சியிலை
பாட்டி வடை சுடுறா'

குழந்தை வளர்ந்து
குழந்தை பெற்றது...
'அது என்ன பாட்டி?'
குழந்தை
நம்புவதாய் இல்லை;
வடை சுடும் கதைகளை...
"அது
ஷெல் விழுந்த பள்ளமடா
செல்லப் பேரா...!"

தலைமுறை கடந்தது...
அதே கேள்வி;
அதே பதில்...!

குழந்தை
திருப்பிக் கேட்டது;
"மல்ரி பரலா, ஆட்லரியா...?"!!

விக்கிச் செத்தாள்
சோறூட்டிய கிழவி!