Friday, May 25, 2007

சிவப்பின் தொடக்கம்...!


இனியவளே.....!
நிலவு
உதயமாகாத
ஒருபொன்
அந்திப் பொழுதில்,
அலைகளின்
ஆசீர் வாதத்தோடு,
உன்னை நெருங்க
நினைத்த போது.....
ஆசைக்கு
அடி பணிய
நீ மறுத்தாய்....!

வலிய கரங்களில்
அடங்கிப் போயிற்று-உன்
மெலிய எதிர்ப்பு...!

மெல்ல
நீ உன்
வசம் இழக்கையில்...,
சிவந்தது,
கிழக்கெதிர்...!
விழுந்தது,
கடலில்
ஒளி விளக்கு...!

பிரியும்போது,
நீ சொன்னாய்....

"என் உணர்வுகளையும்
மதிக்காது விடில்
நாம் பிரிந்து செல்வதை விட
வேறு வழி இல்லை..."!!

Thursday, May 17, 2007

பேசப்படாத படுகொலை....!




கவி பல கண்டது மரம்....!
கவிதைகள் வெறும் பூக்கள்
மாலை தொடுங்கள்
காவியமாக.....!

மரம்
மிகப்பெரியது;
மனிதனை விடவும்....!

உயிர் மட்டுமல்ல
மனமும் உளது மரத்திற்கு...;
கொடை மனம் மட்டும்....!

நேற்று என் வளவில்
நெற்றி நிமிர்த்தி
காற்றிசை செய்தது மரம்...

கீழ்த்திசைக் கதிரொளி
பட்டுத்தெறிக்க,
பொட்டொளி சிந்த
புலர்ந்தது பொழுது....

புட்கள் அதன்மிசை உட்கார்ந்திருந்து,
பூபாளம் இசைத்திடப்
புலரும் பொழுதில்
எத்தனை நெட்டிகள்
நாம் முறித்திருந்தோம்.....!

முன்னர் என் பேரன்,
நீட்டி நிமிர்த்தி
முற்றத்து நிழலில்
முறுவலித்துறங்கிட
நிழல் கொடுத்திருந்ததும்
இந்த மரம் தான்.....

எந்தையும் தாயும்
தம் பெயர் பொறித்து
இன்புற இரசித்ததும்
இந்த மரம் தான்......

தாழ்வுற வீசிய
தடித்த கிளையில்
தாங்கியிருந்தது
ஊஞ்சலோடு என்னை.....

பக்கத்து வீட்டுப்
பையன்களோடு
பசு புலி ஆடப்
பார்த்துஇரசித்தது.....

இன்னும் இதற்கு
எத்தனை கதைகள்....!

எத்தனை எறிகணை
தாங்கித் தடுத்தது....!

தெரு விஸ்தரிப்பு
திட்டம் வருகையில்,
வேலி எங்கள்
வீட்டை நெருங்கிற்று...!
மரம் மிக நகர்ந்து,
தெருவிற்கு போயிற்று....!!

நாள்கள் எண்ணத்
தொடங்கிற்று
நம் மரம்....!

வீதி ஏனோ,
குன்றும் குழியும்...!
இருந்தும் கூட,
விதி விடவில்லை;
மரத்தைக்கூட....!

பாதுகாப்பென்றது
'பெரிய' தரப்பு...!

'பதிவுறு கிளைகளில்
பெட்டிகள் வடிவில்
பொருத்துவர்;
வெடித்தால்,
பெரும் துயர்'
என்றது....!

ஒரே தினத்தின்
இரு மணித்துளிகளில்
இறையடி சேர்ந்தது
மரம்.....!

எங்கே உளது
'மர உரிமை ஆணைக்குழு'...?

மரம்
மிகப்பெரியது;
மனிதனை விடவும்...!

இதை விட நண்பா,
நானும் நீயும்
இறந்தே இருக்கலாம்
'கிளை மோர்' வெடியில்....!!

நம் போல் மனிதர்
பிறப்பது சுலபம்...!!!

Tuesday, May 15, 2007

சாவு நெருங்குதல்......!


அவர்களிடம்
பெரியதொரு பட்டியல்
இருக்கிறது....!

ஒருபுறமாக
தேய்வடைவதும்
மறு புறமாக
வளர்தலும்
கொள்ளும் விகிதங்கள்
ஒன்றையொன்று
விஞ்சுவதாய்..;
'மேசைக்கு போதலும்
வெளியேறுதலுமான'
சந்த முறைகளின்
இடையே...
இயக்கமுறுகிறது
பட்டியல்.....

ஒவ்வோர்
கணக்காய்
முடித்துக்கொண்டு வருவர்....

பட்டியல் குறுகுவதில்
முனைப்பாய்...

நேர் நின்றெதிர்த்தோர்,
காட்டிக்கொடுத்தோர்,
மறுபுறம் சார்ந்தோர்,
பெரும் பழி செய்தோர்,
உடன்பட மறுத்தோர்,
எதிருரை செய்தோர்,
எழுத்தில் எதிர்த்தோர்,
தெரு வம்பளந்தோர்.......
எத்தனை என்பது
அவர் கணக்கறியார்...,
பட்டியல் தேய்வதே
பெரு முனைப்பாக.....

தட்டிச்சரித்து
தெருவினில் போடலும்
வெட்டி,
வெளியிடை
வீசி எறிதலும்
பற்றைகளிடையுடல்
பதுக்குதலோடு
பெரு வெளி மணலிடை
புதைத்தலும் நிகழும்...

பட்டியல் தேய்ந்து
குறுகி வருதலில்
குற்றமும் தீவிரம்
குறைந்தே சென்றது...

நேற்றோர்
தெருவினில்
நெற்றி நடுவினில்
ஏற்றிய சன்னம்
உள் சென்றசைந்து
ஈற்றினில் பிடரியால்
வெளிவந்திருக்க
மூளை சிதறி
முளி வெளியேறி
முற்ற வெளியிலோர்
முதியவர்கிடந்தார்...

சந்திக்கடையருக்
குந்திலிருந்து...,
சிந்தும் கடவாய்ச்
சாற்றை துடைத்து,
வெற்றிலை சப்பிய
விசை தலைக்கேறி....
ஒற்றை வார்த்தை
உமிழ்ந்தவர் கிழவர்....!

"அவங்களுக்கென்ன
அரசியல் தெரியும்..."

அடுத்த நாளே
அவர் போய் சேர்ந்தார்...!

பட்டியல் நகருது....
அடுத்த கட்டம்
எதுவெனத்தெரியுமா?

மரணம் நமது
அருகிலெ உள்ளது....!

'சும்மா இருந்தோர்'
சுடப்படுதல்.....!!

இனியும் ஏன் தான்
சும்மா இருப்பான் நீ?

Monday, May 14, 2007

சிலுவையின் சுமை....!




எனக்கும்
ஒரு விருப்பம்...

உங்கள்
பாவங்களை பரிகரிக்க...
எனதையும் சேர்த்து.....

ஆனால்...
மன்னிக்க வேண்டும்,
நண்பர்களே...

என்னால்
சுமக்க முடியவில்லை
இந்த சிலுவையை...

யேசுவின்
காலத்ததை போலல்ல இது...

கனம் மிகுந்த
முதிரையினாலோ
உருக்கினாலோ
செய்யப்பட்டிருக்கிறது...!

புன்னகை...!







வாழ்வின்
பயணங்களில்
இடையிடையே சந்திக்கும்
உன்
ஏகாந்தப் புன்னகை...!

சில நொடிகள்
சலனத்தின் பின்
இயல்பு மீளும்
வாழ்வு....

எல்லோர்க்கும்
நீ வழங்குவது என்றோ
உன் இயல்பு நிலை
அதுவென்றோ
அர்த்தம் சொல்லும்
மனசு...

பல
தடவைகளின் பின்பு....
தோற்றுப்போனதை
ஏற்க மறுக்கும்
திமிர்...

விலங்கிட முடியாத
உணர்வுகளோடு
உன்
புன்னகையின்
அர்த்தத்திற்கான
தேடல்....

இறுதியில்
மனத்திரை கண்டது
'மொனாலிஷா...!'

அர்த்தம்
கண்டதான பூரிப்பு
ஒருநொடிக்கு மட்டும்...!

பின்பு
டார்வின்சியை தேடி
வாழ்வு.....!

Sunday, May 13, 2007

மனிதம்.....

உன்னை
எவளோ ஒரு தாய்
பெற்றிருப்பாள்...

அவள்
யாரென அறிகிலேன்...

இந்தக்கணத்தில்
உன் செய்தி
அவளை
எட்டியிருக்கும்...

நீ
சிதறிப்போயிருக்கிறாய்...;
நான்
முன்பு நடமாடிய
தெரு ஒன்றில்...!

இன்னும்
நினைவிருக்கிறது
எனக்கந்தச் சாவடி...!

சிலபோது அவர்கள்
எங்கள்பரீட்சைகளை
நிறுத்தினர்...
பல போது
பயணங்களில்
இறங்கி,
உருட்டச்சொல்லினர்
சைக்கிள்களை...

சாவடியின்
சற்று தொலைவிலிருந்து,
மாதிரிகள் பல
அனுப்பப்பட்டன...;
சில
சகோதரிகளின்
உள்ளாடைகளோடு...
டீ.என்.ஏ சோதனைக்காய்...!

அதே தெருவில்
நீ இன்று....
சிதறிப்போயிருக்கிறாய்...

நீ
சிலுவைகள் சுமந்தது
பற்றியும்..
உன் கல்லறைகள்
கருவறைகள் ஆவது
பற்றியும்
இனி பேசப்படக்கூடும்....

அது வேறு கதை...

உன்னை
எவளோ ஒரு தாய்
பெற்றிருப்பாள்....

ஓ..!
நீ சிதற வைத்த
பண்டாரவையும்....!

Thursday, May 10, 2007

வேலிகள்...

நீண்ட
இடைவெளிக்கு பிறகு
நாங்கள் சந்தித்திருந்தோம்....

ஆரத்தழுவி
தோளில் கையிட்டபோது,
'அது' தட்டுப்பட்டது....

"நீ...."
என்றேன்...
"ஓம் நாங்கள்சேர்ந்திட்டம்"
அறுபது வயது
அப்பாவைச் சுட்டினான்...

நெஞ்சின்
நரைத்த மயிர்களுக்கிடையில்
'அது' தொங்கியது...
அவன்
அக்காவின் கழுத்திலும்...
இல்லை,
அது மஞ்சள் நூல்...!
'அந்த'சின்னம்துலங்கியது...

தாலி பெண்ணுக்கு
வேலி என்பார்களே...?

'ஆமாம்;
களமும்
கணவனும்
தாண்டி அகல விடாத....'
ஓ...!
தேவைப்பட்டால்,
தேசத்திற்கும்.........!

மெளனித்தேன்...
அவன் இப்போது
உள்ளே இருக்கிறான்...!

'காக்கை வன்னியர்...'

தெருவோரமாக
இருவர் ஆயுதங்களோடு....
முருகப்பன்
அருகில் வந்து
மெதுவாய் சொன்னான்...

"பின்னுக்கு
நாலைந்து பேர்
நிக்கினம்...
பெரும்பாலும்
பெட்டையள்...."

ஆபத்தை
உணர முன்பே
பிடிக்கப்பட்டு
திமிறத் திமிற.....

முருகப்பன்சிரிக்கிறான்...
ஏற்றிக்கொண்டு
வண்டிபுறப்பட்டது...

வாரிசுகள்....,
குரைத்துக்கொன்டுவெளிவந்தன...!!

முருகப்பன்
மூக்கை சுழித்தான்...!
'இதுகள் இனி
வளரத்தான் போகுது...'!!!

Wednesday, May 9, 2007

உடமைகளோடு...

குஞ்சுக்குடிசை...
கூரை செல்லரித்து,
நீலம் தெரியும்...;
நீர் சேரும்,மாரியினில்...!

பட்ட கதிகால்;சில
பழைய துருப்பேணிகள்...

ஊசித்துளைகளினால்
உருக்குலைந்த பழம் பானை...

போன முறை ஓடித்
திரும்புகையில்,
தெருவிலெடுத்த
பச்சைப் பெட்டி நிறைய,கிளிஞ்ச
பழம் சேலைகள்...

வாலை ஆட்டியபடி ஒரு
குட்டி நாய்...!

பல் விழுந்த வாயின் புறுபுறுப்பு...
"நான் சேர்த்ததுகள்...,
விட்டிட்டு போகேலா;
வாறது வரட்டும்"!!

பயம்..!


நிலவு சிந்திய
ஒளியின் துளிகள்,
மரக்கிளை தழுவி
நிலத்தில் வடிந்தன...
காற்று இரைந்தது...;

தூர திசையில்
துவக்கு வெடிகள்
அமைதி கலைத்தன...

'அசோக்கா' மரத்து
இலை குழை மறைவில்
'நத்து' ஒன்றிருந்து
'நக் நக்' என்றது....

எங்கோ தொலைவில்
நீள் வால் குருவி
நிசப்தம் கலைத்தது...

ஊழிக்குரலென
நாய்கள் கூடி
ஊழையிட்டன...

'பேரழிவு' என்றது
பேத்திக்கிழவி...!

விடியும்பொழுது..,
வரப்புகளோடு....
சீருடைகள் சில...!

பெட்டைகள் மூன்று..
பாவம் தாய்க்கும்
நாற்பது வயது...
பெடியளும் இரண்டு..

'காடையர்' என்றது
கண்ணுக்கிழவி...

கதவில் தட்டொலி
கேட்கலாயிற்று...!!

சலனம்...

முத்தாகி என்னுள்
முழுதாய்அமிழ்ந்திட்டாய்...

இத்தால் உலகில்
இன்பங்கள் யாவும்
வைத்தாள்,பராசக்தி;
உன்னிடத்தில்
எந்தனுக்கு...?

இதழிடுக்கில் ஊர்ந்து,
சுழித்துச் சிலிர்க்கின்ற
புன்னகைக்குள்
என்னை
பொறி வைத்தாய்...
போதை விழிவைரத்து
மளிக்காத
விளிம்புகளால்
கோலம் வரைகின்றாய்
இதயத்துள்...
காலமிது
கெட்டுக்கிடக்கிறது;என் வாழ்வு,
சாலை நடு மீது
சரிந்துளது...!

கல் எனவோ;காலில்
காயம் விளைவிக்கும்
முள்ளெனவோ-தூக்கி
வீச மறுக்கிறது மனசு..!

காலம் கனியும் பொழுதுகளில்
மீண்டும் உன்
'ஜாலம்' தொடரட்டும்...
இன்று போய்நாளை வா...!

Tuesday, May 8, 2007

வெறி..!

உலகின்
பெரும் துயர்
எதுவென வினவினாய்...

மேல்,கீழ்
எனப்பெரும்
தேசம் பிரித்தலும்..
நிலத்திடை
கண்டப்பிரிவுகள்
செய்தலும்..
தேசியம் பேசி
மானிடம் மறத்தலும்..
கறுப்பினம் என்றொரு
ஒறுப்புகள் செய்தலும்..
கடவுளின் பெயரில்
மத வெறி கொள்ளலும்
ஈனம்;அதிற்
கடை ஈனம்
அறிவையோ?

உன்னில் நானும்
என்னில் நீயும்
வேறென்றுணர்தல்...!

நன்றி

எங்கள்
பயணத்தின்
பாதைகளில்
மறந்தே போனோம்...!

கட்டவிழ்ந்த சுமையை
கட்டி விட்டவனை..,
கால் செருப்பு
தைத்தவனை.,
காய்ந்த நா
நனைத்தவனை...;

இன்னுமொன்றை...,
காத தூரம் தொடர்ந்து வந்து
களைத்து வீழ்ந்த
கறுப்பனை..!!

சில சல சலப்புகளின் முடிவு..!


இருளின் ஒரு துளி
உருகி உறைந்து,
திரள் கொண்டிருப்பது போலும்- சுவரினில்
உருக்கி தெளித்த கரு'மை'
உறைந்து,
உயிர் கொன்டசைவது போலும் இருந்தது...

மின்சூழ் ஒளியின் கற்றைகள் பட்டு
மிளிர்ந்தது;மெல்ல
மிரண்டே அசைந்தது...

தென் ஈர்க்கு கற்றைகளின்
கால் தீண்ட உவப்பிலா
இடுக்கில் நுளைந்து,
உடலம் மறைத்தது ...

பாதி அடி பட்டு
பதறிப் பதை பதைத்து
நாசினியில்,
நாசி
நாற்றமிசை துயருற்று
நான் ஏறி ஓடும்
ஈருருளி மீது
இடுக்கில் ஒளிந்துளது...!

இறந்ததுவோ இல்லை
இறங்கிமறைந்ததுவோ...?
உறுதிப்பாடில்லாது
இருக்கையினில் ஏறி
இருப்பது தான் எவ்வாறு..?

சக்கரத்தின் மேலிடுக்கில்,
சீற்றடியில்,
செயின் கவரில்
சிக்கியதோ என்று பெரும் தேடல்...!

ஆளுக்கு ஆள் மாறித்
தேடியதில்;திகில் கொண்டு
ஓடியதில்,வந்து
கூடியது அயல்..!

அரை மணியின் பின்
அமைதி தொலைத்திருக்க,
சற்று தொலைவில்...,
எப்போதோசெத்துப்போய்
அமைதியாய் கிடந்தது,
சிலந்தி..!

ஒரு இனிய உதயம்...!

ஓரு
புதுப்பூவின்வாசம்
முகரப்படுகையில்..,
எழுதப்படுகிறது,
ஒரு மொட்டிற்கானமுகவரி....!

மனிதர்களாய் வாழ்தல்.....

எம்மை நாமே
மனிதர்கள்என்றோம்.....,
மனிதர்களை காணும் வரை..!
மிருகங்கள் தம்மை
தாழ்வாய் எண்ணின..;
எம்மை காணும் வரை....!

Thursday, May 3, 2007

பாரதி மூட்டிய தீயுடன் என் வேள்வி...!

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவ தெங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்குவாழ்ந்திடுதல்
நன்றோ? சொல்லீர்!


தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்....."


- சுப்பிரமணிய பாரதியார்.

THE FIRST FLY

Hi Dear All,


Please wait for the first fly of VAANAMPAADI.........