Tuesday, May 3, 2011

''ரஷ்யாவா, சைனாவா....?''

இளமாலை ஒளிசாயும் இரவுக்காலம்- இது
வளமான அணி ஒன்றின் பிரிவுக்காலம்
தளராது சளையாது பெரும்போராடி, கல்விக்
களம் ஒன்றின் கரை சேரும் கனவுக் காலம்..............

மொழியொன்று எழுகின்றது, வண்ணக்
கவியொன்று பொழிகின்றது........
விழியின்று துளிதூவத்தவிர்க்கின்ற போதும்
இவர் இதயங்கள் அழுகின்ற(ன)து.....!

அணியொன்று வழி கண்டது - இனி
அவரவர் விதி கொண்டது......,
அது வென்று திசை மாறி அகல்கின்ற போதும்
அகம் காக்க அகம் கொள்ளுமா .........?

இடர் வந்து தடம் இட்டது-அதை
இனிதாக இது வென்றது
இருபத்தி எட்டென்று பெயர் கூறி ,பீடத்தில்
இணையற்று நடந்திட்டது...............

முப்பதை அணைத்திட்டது- அதன்
முதுகினில் தட்டி ஓடென்று சொல்லி
அருகினில் இது வந்தது.....!

முன்னேற வழி சொன்னது - நல்ல
முயற்சியில் தளரா முழுத்திறன் காட்டி
முதல்வனாய் அது நின்றது.....!

***
நிஜங்கள் நிலை மாறித்
தொலைவாகலாம்
நினைவுகள் மறைவாகுமா.....?

முதல் முதல் பீடத்தில்
கால் வைத்த முப்பதை
அணைத்திட்ட அணி அல்லவா...?

சிந்தனைக்குதிரைகள்
பின் நோக்கி விரைகையில்
சந்தித்த அற்றை நாள்
நினைவுகளில், ஈரம்
சற்றும் உலராமல்
பசுமை இருக்கிறது.....!

இருபத்தி எட்டும் முப்பதும்
ஒட்டிக்கொண்ட
அந்த இருபத்தியொரு நாள்கள்.....
இன்றும் தொடரும்
இழையறா நட்பின்
இனிய சாட்சிகளாய்.......,
பாசத்தீ பற்ற வைத்த
பசுமைப் பொழுதுகளாய்.......,
தங்கள்
பயனைப் பறை சாற்றி நிற்க...,
நம் இளையோரை எட்டாத
இனிய பொழுதுகளின்
கலக்கம்..,
காதுகளில் கேட்கிறது......,
குறைப்பிரசவ நட்புகளாய்......!

நம்மை அறியா அவர்கள்.....;
அவர்களை அறியா நாம்....!

கட்டியம் சொல்வது என்ன தெரியுமா?
நாளைய விடுதிகளில் நம்
‘H .O’ களின் காதுகளில்
கேட்டும் கேட்காமலும்
வெள்ளைக் கோட்டுகள்
கிசு கிசுக்கும்......
இந்த அண்ணா
''ரஷ்யாவா, சைனாவா....?''


ஒரு சின்ன வேண்டுகோள்.....

குடிசையின் கூரை துளையுண்டு
நிலம் எங்கும் மழையின் கோலம்..........
கூரையை சரி செய்வோமா,இல்லை
குடிசையையே அழிப்போமா.......??

***


*பி.கு- யாழ் மருத்துவ பீடத்தின் இருபத்திஎட்டாம் அணி, பீடத்தை விட்டு விடை பெறும் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கவிதை, பலரின் வேண்டுகோளுக்கிணங்க இங்கே பதிவாக்கப்படுகிறது.