Saturday, April 5, 2008

தெருவோரக் 'கரும் பச்சைகள்'......


உச்சிக்கதிர் மெல்ல
நடு வானம் விலக, வெயில்
உச்சம் தணிக்க
எண்ணுகிற முன் மாலை....!

எச்சமென இருந்த சில
எண்ணெய்த் துளிகளையும்
இழந்து என் வண்டி,
முச்சந்தி முடுக்குகளில்
மூச்சிளுத்து விக்கி
முணு முணுத்து நிற்க முன்னர்..,
முன் தெருவிலிருந்த
'பெற்றோல் செட்' நோக்கி
வண்டி நகர்கிறது,
சந்தி தெரிகிறது....!

அடிக்கடி அவர்களின்
அணிகள் விரைவதனால்
மணிக்கணக்காய் மூடி நமை
தவிக்க விடும்
பெருந்தெருக்கள்....!

இன்றைக்கு ஏதோ
என் காலம் பிழைக்காமல்
முன்னுள்ள வீதி
முழுதும் திறந்துளது...!
இருந்தும் அவ்வோரத்தில்,
''கரும் பச்சை'' துணையோடு
''காக்கிகளின்'' வழி மறிப்பு.....!

மறித்து மடி தடவி,
கை உயர்த்த விட்டு
கமக்கட்டு, இடுப்பு வரை
காசின்றி 'மசாஜ்' செய்து...,
அடையாளம் கேட்டு,
கடமை முடித்திருக்க;

பல தடவை
தெருவில் பார்த்துப்
பதிந்த முகம்...,
பகல் முழுதும்
தெரு வெயிலில்
காய்ந்து நிறம் இழந்து
விழி சுமக்கும் ஏதோ
வகையறியா ஏக்கமுடன்......;
எனை மட்டும் ஏனோ
'போங்க' எனச் சொல்லியது.....!

கரும் பச்சைச் சீருடைக்குள்
ஊடுருவி அம்மனதைக்
காணப் பொழுதில்லை..,
காலம் சரியில்லை.....!

என் வண்டி விரைகிறது...,
எண்ணெய் நிறைகிறது...;
ஏனோ தெரு இன்னும்
நீள்வது போல் தெரிகிறது........!!