Monday, June 1, 2009

இதய மாற்று சத்திரசிகிச்சை......!


கல்லுண்ட நெஞ்சம்
கனிவுண்டு எழுந்துற்று,
மெல்லுண்ட பெண்மை
மேலும் இழகிற்று,
சில்லென்று காற்று
சீதளம் சுமந்துற்று,
சொல்லென்றுரைக்கும்;
சொல்ல முடிவதில்லை......

கண்கள், கோடி
மின்னல்கள் வெட்டும்,
நோக்க நினைத்திருக்கும்
நோக்கும் கால்
மண் நோக்கும்...!
பார்க்கப் பொழுதகலும்,
பாதி உயிர் போய் மீளும்....!
வேர்க்கத் தொடங்கி விடும்,
வேறுலகம் ஆகி விடும்....!


நினைவுகள் கூடிநிறைவாக்கும்
'நீ' யில்லையேனும்
நினைவுகளோடு
நீண்ட பொழுதகலும்.....
நாள்கள் மணிகளாய்,
மணிகள் நிமிடங்களாய்,
நிமிடங்கள் நொடிகளாய்,
சிந்திக்கும் தோறும்
செவ்வணுக்கள் ஒவ்வொன்றும்
சிலிர்த்திருக்கும்....

காலங்கள் கடந்தும்
காரணமறியாத காரியமாய்...,
பாதையறியாது வந்தடைந்த
பயணியாய்,
பிரிவில் ரணம் தரும்
புதிராய்.....
கத்தியின்றி ரத்தமின்றி
உனக்குள் ஒரு
குருசேஷ்திரமே
உருக்கொள்ளும்......
அதுவே பின்பு
அழகிய மலர்கள்
தலையசைக்கும்
நந்த வனமாய் பூக்கும்.....

கூரிய வேலால்
உன் இதயம் கீறப்படும்
அதே கரங்களால்
வருடப்படும்....!
ஒரு துளி குருதியும் சிந்தாமல்,
எந்த வைத்திய நிபுணனும்
இல்லாமல்,
சத்தமில்லாமலே நடந்து முடியும்
ஒரு இதய மாற்று சத்திரசிகிச்சை......!!