Monday, November 27, 2017

26.11

செந்தமிழ் வாழ்த்திடும் கொடையாகினாய்
சிந்திய குருதியில் சிறையாகினாய்- உன்
முந்தையர் பாதையில் முடிவாகினாய்-பேர்
அந்தமில் ஈகையால் முதலாகினாய்..

வைகறை எண்ணி அறைகூவினாய் -நம்
வாசலில் வசந்தத்தை விலை பேசினாய்
வந்தது சேரமுன் இளைப்பாறினாய் -விடி
வானில் இருந்து நீ பூத்தூவுவாய்....

-வேல் சாரங்கன்

Friday, November 10, 2017

மழை



மெல்லப்பொழிகிறாய்.....,
மேதினியின் மேனியதில்
செல்லத்தழுவலுடன்...!
சென்றாண்டு எந்தச்
சிறையிருந்து நீ மீண்டாய்....?
**

கடுங்கோடை வெயில் காய்ந்து
களைப்பாகி ....
நெடுங்காலம் நீயின்றி
துரும்பாகி...
அருந்தாமல் இருந்தாள் உன்
புவிக்காதலி- பசலை
நெருப்பாகித்தகித்தாள் உன்
அடிச்சேவகி....

***

துளியாகி வீழ்ந்தாய் புவி
மடி மீதிலே... ;அவள்
நறுந்துகை தெளித்தாள்
அது மண் வாசமே.......!

****

துளியாய், தூறலாய்
தழுவிக்கிளர்வுற்று;
பெருக்காய் ,பெருமழையாய்
பெருவலியாய் பிரவகித்தாய்........

*****

தெருக்கள் குளிப்பாட்டி,
திண்ணைகளை தூய்தாக்கி ,
மண்ணுக்குள் வடிவாய் ....
மலர்விப்பாய் இளவேனில்......

பல குளங்கள் நிறைப்பாய்,
பச்சையங்கள் புதுப்பிப்பாய்,
உலகுயிர்கள் வாழ
உவப்பாய் உணவளிப்பாய்.....

******

மெல்ல தழுவிடிலோ
வலியுணர்த்தாதுன் சேர்க்கை....
செல்லத்தழுவலுடன் சிந்திப்போ
அது போதும் .....
மெல்லப்பிரசவிக்கும் பூமி.....!!

Saturday, October 28, 2017

மரணித்துப்போனவனின் முகநூல்....


காலங்கள் கடந்தும்
இடுகையிடப்படாத கணக்கிற்கு
நட்பு வேண்டுகை கொடுத்துப்ப்போகின்றன ;
புதுமுகங்கள்.....

கிராமத்து வீடுகளின்
கிடுகு வேலிக்கடவைகளூடு
நீளப்பயணிக்கும்
கால் நடை போல்
கணக்குகள் தாவிக்
கண்டுகொள்கிறாள்;
தொடர்பு தொலைந்து போன பள்ளிக்காதலி........!
தெரிந்தும் சொல்லத்தயங்கும்
குறி சொல்பவன் போல
ஆதி சொல்லி, பாதை சொல்லி,
அந்தம் சொல்லாதிருக்கிறது காலக்கோடு......!!

நன்றி சொல்லப்படாமலே கிடக்கின்றன
நூற்றுக்கணக்கான
"அமைதியுள் உறைக"கள் ........!

மனங்களில் பதிவுறும் வாழ்வை
அறிவுறுத்துகின்றன
தொடர்ந்தும் விருப்பிடப்படாத பதிவுகள்.......!!