Saturday, October 28, 2017

மரணித்துப்போனவனின் முகநூல்....


காலங்கள் கடந்தும்
இடுகையிடப்படாத கணக்கிற்கு
நட்பு வேண்டுகை கொடுத்துப்ப்போகின்றன ;
புதுமுகங்கள்.....

கிராமத்து வீடுகளின்
கிடுகு வேலிக்கடவைகளூடு
நீளப்பயணிக்கும்
கால் நடை போல்
கணக்குகள் தாவிக்
கண்டுகொள்கிறாள்;
தொடர்பு தொலைந்து போன பள்ளிக்காதலி........!
தெரிந்தும் சொல்லத்தயங்கும்
குறி சொல்பவன் போல
ஆதி சொல்லி, பாதை சொல்லி,
அந்தம் சொல்லாதிருக்கிறது காலக்கோடு......!!

நன்றி சொல்லப்படாமலே கிடக்கின்றன
நூற்றுக்கணக்கான
"அமைதியுள் உறைக"கள் ........!

மனங்களில் பதிவுறும் வாழ்வை
அறிவுறுத்துகின்றன
தொடர்ந்தும் விருப்பிடப்படாத பதிவுகள்.......!!