Wednesday, May 1, 2013

மகனுக்கு மயிலில்லை;சிவனுக்கும் மானமில்லை...

மண் பிரிந்து பல ஊர்கள் அகதி என அலைந்து
கண்களதில் ஒளியிழந்து கட்டுடலும் தேய்ந்து
பெண்ணில்,மண் பொன்னில் நாட்டமிழந்தோய்ந்து
விண்ணுலகம் ஏகவேனக் காத்திருந்தார் விசுவர்....

அறமொன்றே கூடவரும் மற்றொன்று இல்லை
மறலி வரும் நேரத்தில் வரும் சுடலை ஞானம்
கறங்கு உடல் பிரிகின்ற கணமெண்ணி, தம்வாய்
திறந்து அவர் கிடக்கின்றார் இழுக்கிறது 'சேடம்'...!

இருந்தாலும் அவர் ஆவி பிரியாது போலும்
மருந்தேதும் திருத்தாமல் மனிதர் அவர் மனதுள்
பெருந்துயரொன்றுள்ளதென பேசுமொலிகேட்டு
முருகன் அவர் குலதெய்வம் அருகில் வரலானான்!

வரமொன்று கேளென்றான் ஈசனவன் மைந்தன்
கரம் கூப்பி கேட்கின்றார் கண்கள் நீர் உகுத்தார்
'தர வேண்டும் நான் உதித்த மண்ணிலேயே சாக'
சிரம் தாழ்ந்தான் முருகன் அவன் செய்வதறியாது...

முருகன் தன் கோவிலினை பார்க்கவென எண்ணி
தெருவழியாய் போனான் விசுவர் மண் நோக்கி,
அருகிவரும் மயிலினத்தால் வாகனமும் இன்றி!
திருப்பி அவர் விட்டிட்டார் முருகனையும் கூட...

தந்தையிடம் போனான் மயிலென்றான் மைந்தன்
சிந்தையிலே துயர் படிந்த ஈசன், மகன் நோக்கி
எந்துகிலே நானிழந்தேன் தோலில்லை உடுக்க;
மைந்தா நீ புலி தேடென் மானம் மீழ் என்றான்....