Monday, June 1, 2009

இதய மாற்று சத்திரசிகிச்சை......!


கல்லுண்ட நெஞ்சம்
கனிவுண்டு எழுந்துற்று,
மெல்லுண்ட பெண்மை
மேலும் இழகிற்று,
சில்லென்று காற்று
சீதளம் சுமந்துற்று,
சொல்லென்றுரைக்கும்;
சொல்ல முடிவதில்லை......

கண்கள், கோடி
மின்னல்கள் வெட்டும்,
நோக்க நினைத்திருக்கும்
நோக்கும் கால்
மண் நோக்கும்...!
பார்க்கப் பொழுதகலும்,
பாதி உயிர் போய் மீளும்....!
வேர்க்கத் தொடங்கி விடும்,
வேறுலகம் ஆகி விடும்....!


நினைவுகள் கூடிநிறைவாக்கும்
'நீ' யில்லையேனும்
நினைவுகளோடு
நீண்ட பொழுதகலும்.....
நாள்கள் மணிகளாய்,
மணிகள் நிமிடங்களாய்,
நிமிடங்கள் நொடிகளாய்,
சிந்திக்கும் தோறும்
செவ்வணுக்கள் ஒவ்வொன்றும்
சிலிர்த்திருக்கும்....

காலங்கள் கடந்தும்
காரணமறியாத காரியமாய்...,
பாதையறியாது வந்தடைந்த
பயணியாய்,
பிரிவில் ரணம் தரும்
புதிராய்.....
கத்தியின்றி ரத்தமின்றி
உனக்குள் ஒரு
குருசேஷ்திரமே
உருக்கொள்ளும்......
அதுவே பின்பு
அழகிய மலர்கள்
தலையசைக்கும்
நந்த வனமாய் பூக்கும்.....

கூரிய வேலால்
உன் இதயம் கீறப்படும்
அதே கரங்களால்
வருடப்படும்....!
ஒரு துளி குருதியும் சிந்தாமல்,
எந்த வைத்திய நிபுணனும்
இல்லாமல்,
சத்தமில்லாமலே நடந்து முடியும்
ஒரு இதய மாற்று சத்திரசிகிச்சை......!!

Thursday, May 28, 2009

கடவுள்களின் படியிறக்கம்…..!

காலங்களால்
தோற்கடிக்கப்பட்டும்
ஆசைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டும்
மனிதங்கள்
மிருகங்களான போது
எஞ்சிய மனிதங்களே
கடவுள்களாக்கப்பட்டன......!

மிருகங்கள்
சந்தோசித்தன…..;
தாமும்
கடவுள்களாகும் நாள்களின்
விரைவினை எண்ணி……!!

கணத்தாக்கு….!

என் இதயம்
ஒரு கணம்
உரல் ஆயிற்று;
உன்
பார்வை உலக்கைகள்
பட்டு…..
சிதறிப் பரவின
உடலெங்கும்
நெல் மணிகள்……!

பிரசவங்கள்....!

இந்தக்
கட்டிலில் தான்
நானும் பிறந்தேனாம்….
என் தாய் சொன்னாள்…!
பின்பு இதை
எத்தனையோ
பூச்சிகள்;
எலிகள்;
பூனைகள்
பிரசவ விடுதியாக்கின…..

பின்பு ஒரு நாள்
அதன் சட்டங்களையும்
பலகைகளையும்
‘அவர்கள்’
காவிப் போயினர்…….
பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தது.…
‘அவர்கள்’ ஏதோ ஒரு
பிரசவத்திற்கு
தயாராகியிருந்தனர்……...

Wednesday, May 27, 2009

முடிந்ததும் முடியாததும்……

புகார் போகாத
அந்தப்
புலரிகளில்
விழித்து
வெளியேறிய போது
புலராத மீதிகளாய்
புகார் கட்டிகளாய்
தெரிந்த
கறுப்பு உருவங்கள்
சுற்றி வளைத்து,
சாய்த்து,
சாரியாய் நிற்க வைத்து,
ஒவ்வொன்றாய்
தலையசைத்து,
தட்டித் தடவி
விடும் வரை
காத்திருப்பு……...
கடிகாரமும்
கண்களுமாய்……
சுய விருப்பின்றி…..

பின்பும் அப்படித்தான்……
கால்கள் கடுக்க….
ஆனால்..,
அவர்களாகவே…….!


பின் இணைப்பு;

எதிர்ப்பு போராட்டங்கள்,
பேரணிகள்,
பகிஷ்கரிப்புகள்,
கடையடைப்புகள்,
வேலை நிறுத்தங்கள்,
நிர்வாக முடக்கல்கள்
எல்லாம் ஈற்றில் ஒடுங்கின…..,
பரமேஸ்வரன் கோவில்
கூட்டுப் பிரார்த்தனையாய்……..!!

நவீன இராமர்கள்....

தெரிந்தோ
தெரியாமலோ
இதயத்து அறைகள்
அசோக வனம் ஆகின…..
ஆனால்.....
வாயு மகன்,
வாலி மகன்
தேடி வரவில்லை;
இராகவனும்
யாரையுமே
தூது விடவில்லை….!

பிந்திய செய்தி…..;
அவனும் ஒரு
அசோக வனத்து
உரிமையாளனாய்….....!!

மாசுக்கள்...!

நீங்கள் மட்டுமல்ல
சகோதரிகளே…...
ஆற்று நீரும்
காற்றும் கூட
வேற்றுடையில் தான்
வருகின்றன.....,
நகருக்குள்....!
யாரிடமிருந்து
யார் கற்றீர்கள்…..?

Wednesday, May 6, 2009

உனது பிரசன்னம்...!


புரட்டப்பட்ட
புத்தகத்தின்
பல நாள் ரேகை படிந்த;
கடந்து போக முடியாத
பக்கங்களிலும்.....

ஒரே பக்கத்தில்
மீள மீள வாசிக்கப்படும்
பந்திகளின் இடையேயான
முற்றுப் புள்ளிகளிலும்.......

படுக்கையறையின்
மேல் முகட்டில்
படர்ந்த
ஒட்டறைகளிடையே
பார்த்துப் பழகிப் போன
பொட்டுப் பூச்சியின்
தரிப்பிலும்.......

மூடப்படாத
கண்களால்
மூன்று நேரம்
தரிசிக்கப்படும்
பெண் சாமிப் படங்களிலும்......


ஏதோ ஒரு
முக்கிய தேதிக்குப் பின்,
கிழிக்கப்படாமல்
தொங்கும்
நாள் காட்டியின்
தேதி எழுத்துகளிலும்.....

இருந்து கொண்டேயிருக்கிறது
உன் பிரசன்னம்......!

Sunday, April 26, 2009

கடல் சூழ் தேசம்...


ஊழிக் குரலாய்
உரசிச் சென்றது
காற்று....

உப்புக் கரித்தது
கல்லில் மோதி
வாயில் விழுந்த
கடல் துளி....

பாசி படர்ந்தும்
வழுக்காது
குழி விழுந்த பாறைகள்.....

ரயில் தெருவின்
ஓரத்தில் இடையிடையே
அசையும் மறைப்புகள்...

பிடி தளராது சுழலும்
குடைகள்....

கல்லில்
மோதும் அலைகள்
நல் வாழ்த்து
சொல்வதாய் கற்பனை....

எல்லாம்
வழமை போலவே....

பாறையோடு
காதல் கொண்டு
அலை சொல்லும்.;
''மறு முறை
முத்தோடு வருகிறேன்...''
முடிந்ததே இல்லை...

மீண்டும் மீண்டும்
பிண எச்சங்களாய்.....

Saturday, March 28, 2009

இழந்த நெஞ்சுரம்....!


வானம் தீ உமிழ்ந்து
வாரி இறைப்பது போல்
வானில் கரும் பறவை
சாகசங்கள் காட்டியது......
ஊனமுற வைப்பதனால்;
உயிர் குடித்து உடலத்தை,
தானமென மண்ணில்
தொகை தொகையாய்
குவிப்பதனால்
உவகையுறும்
எண்ணமுடன்
ஊழிக் குரல் எடுத்துக்
கூவின அக்
கொலைக் கணைகள்.......

குஞ்சு குருமன்கள்
குருத்தினிலே கருகலுற,
பஞ்சுப் பொதி தீயில்
பற்றியது போல்
தேசம்.....!

நஞ்சுப் புகையில்
நாசி நனைவுற்று,
வெஞ்சமரின் கோரத்தில்
வேகியது அவர்
சுவாசம்.....

சொந்த இடம் நகர்ந்து,
தொலைவாகிப் பலநாளாய்
அந்தமில் பயணத்தில்
ஆயிரம் இடம் மாறி,
சந்திர வெளியே
சத்திரமாய் அவர்
வாழ்வு..........

சாக்கணத்தை எதிர்நோக்கி,
ஏக்கமுடன்
உயிர் வாழ்க்கை......

இருந்தாலும்,நெஞ்சத்தின்
இறுமாப்பு
இழக்காமல்
எம் தேசம்;
எம் வாழ்வு;
எம் மானம்
என எண்ணி....,
நம்பிக்கை என்ற
நன் மரமாய் வேரூன்றி,
நெஞ்சு நிமிர்த்தி
நின்றார்;விழவில்லை.....!

தம் வாழ்வைக்
காக்கும் கரங்களினால்
துணிவுற்றார்...!

இருந்தாலும்
நெடும் போரின்
துயரம் வலுவுற்று,
பட்டினியால், பச்சைக்
குழந்தைகளைப்
பலியிட்டு..,
பெரும் வடுக்கள் மாற்ற
மருந்தின்றி
மடிந்திட்டார்.....


அவலத்தின் கடும்
வலியால்
ஆவி நலிவுற்று,
வேறு வழியின்றி
விடை பெறும்
முடிவுற்றார்.....!

மண் தொட்டு வணங்கி-தாய்
மடியென்று கண் கலங்கி
புண் பட்ட உடலங்கள்
சுமந்து முன்
நகர்ந்தார்

பல நாள்கள் துவைக்காத
வேட்டி கிழித்து
வெறும் கையை
மேலுயர்த்தி
வெறுப்புற்ற வாழ்வின்
கடும் பயணம் தொடங்கியது
**உயிர்குடிக்கும்
வேகம்-கால்கள

திசை
தடுக்கும்
தொல் நோக்கம்
முதுகு துளைத்து
மார்பூடு வெளியேற
முன் நோக்கி சாய்ந்தார்
முழுத்துயரும் முடிவுற்றார்.....!!

Saturday, March 21, 2009

விழி தூவி விடைபெறுதல்.....


காதல் என்ற
நிச்சயமற்ற விண்ணப்பத்தால்
கிழித்தெறியப்பட்ட
நட்பு என்ற
நிரந்தர உடன் படிக்கை.....!

மிக ஆழமான
செவிமடுப்பில்
கிரகிக்கப்படும்
அந்தகார
ஓசைகள் போல்....,
எனக்குள்
நான் மூழ்குகையில்
வெளி வரும்-உன்
சலங்கைச் சிணுங்கல்கள்....!

உன்னையும்
என்னையும்
சுமந்து பயணிக்க
இன்னும்
பேருந்துகள் வரும்....!

ஆனால்.....,

வழி இலக்கங்கள்
வெவ்வேறாக......!!

துணை....!

ஒளியின்
சலனமற்று நீளும்
இரவு.......;

மனித வாசனைகள்
தொலைவாகிப் போன
அடர் வனம்.......;

இருதயம் முடுக்கும்
விசித்திர, அமானுஷ்ய
ஓசைகள்.......;

இடமும் வலமுமாய்
கோர்க்கப்பட்ட
பத்து விரல்கள்.....;

நம்பிக்கையில்
நகரும்
நான்கு பாதங்கள்..............
***
மூலமறியா முரண்...
**
விடுவிக்கப்பட்ட விரல்கள்..;
இரண்டு பாதங்கள்...
*
இருள்.............

Tuesday, January 20, 2009

"வயதுக்கு வருதல்..?"


''அம்மா

எனக்கு

எப்போது

பதினெட்டு

வயதாகும்....?''

எது வரை இது நீளும்...?


மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை....?

கவிஞர்களே...!
கடதாசிகளைக் கொடுங்கள்...
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்...
இல்லையேல்,
கண்ணீரையாவது
துடைக்கட்டும்....!

மூடி திறக்கப்பட்ட
பேனாக்களைக் கொடுங்கள்...!
எதற்கும்
கை காவலாய்
சட்டைப்பையில் இருக்கட்டும்...
அதுவாவது....!!