Thursday, March 1, 2018

தலைமுறைகள்


மானிடம் மரித்த பூமியில்
சீவித்திருக்கிறோம்.....
கத்தியின் கூர்நுனியில்
நகரும் பாதங்கள் போல் வாழ்வு....

அந்தகாரத்து திகில் நாள்களில்
அன்னையர்கள் நம் பௌதீகத்தொடர்ப்பறுத்த போது
ஆரத்தி எடுத்துக்கொண்டன
வெடியொலிகளும் கந்தக தூபமும்......

தசாப்தங்கள் பலகடந்த போர் நிலமே வாழ்புலம் ஆகிப்போனது
பல தலைமுறைகளுக்கு......

போரின் மணமறியா
புதுத்தலைமுறைக்கு
வாளும் வன்முறையும் சொல்லிக்கொடுத்தது யார்.....?

புதுப்பூக்களாய் சிரிக்கும் உங்கள்
பிஞ்சுகளுக்கு பூச்செண்டும்
மோட்டார் காரும் வாங்கிக்கொடுங்கள்....
விற்கப்படாமலே கிடக்கட்டும்
விளையாட்டு துப்பாக்கிகள்......!

சுவரிலோ ஆசனத்திலோ
குழந்தை மோதிவிட்டதா .....
மோதியது குழந்தை என சொல்லிக்கொடுங்கள்.....
அ•°•றிணைக்கு உயிர்கொடுக்காமல்.....

ஆனால்.....
நினைவுகள் பத்திரம்.......
மனங்களை விகாரமுறுத்தாத
மென்போதனைகளோடு.......
நீள்கனவுகளின் ஆழ்விதைப்பாய்
இருக்கட்டும்
நம் தலைமுறைகடக்கும் தகவல்கள்...

போரறியா தலைமுறையின்
புலர்வுக்குப்பின்னும்.....
நிறைந்தே கிடக்கின்றன
உறவுகள் தேடும் நம் கூடாரங்கள்.....

வழிமாறிய தலைமைகள்
கைகுலுக்கிக்கொள்கையிலும்
மூடியே கிடக்கின்றன
விசாரணையற்ற சிறைக்கூடங்கள்....

மறுபுறம்....
பெரிய பாம்பினால்
விழுங்கப்பட்ட பின்பு .....
பூச்சியத்திலிருந்து தாயமுருட்டி
ஏணிகள் விலத்தி
எண் எண்ணாய் நகரத்தலைப்படும்
முதிய வழிகாட்டிகள்......

ஏரிக்கரையில் உக்கிப்போகாமலே
மீட்கப்படுகிறது;
பச்சை சீருடை........
இடைத்தலைமுறையின் நினைவுகளை போல .........