Thursday, May 28, 2009

கடவுள்களின் படியிறக்கம்…..!

காலங்களால்
தோற்கடிக்கப்பட்டும்
ஆசைகளால்
ஆக்கிரமிக்கப்பட்டும்
மனிதங்கள்
மிருகங்களான போது
எஞ்சிய மனிதங்களே
கடவுள்களாக்கப்பட்டன......!

மிருகங்கள்
சந்தோசித்தன…..;
தாமும்
கடவுள்களாகும் நாள்களின்
விரைவினை எண்ணி……!!

கணத்தாக்கு….!

என் இதயம்
ஒரு கணம்
உரல் ஆயிற்று;
உன்
பார்வை உலக்கைகள்
பட்டு…..
சிதறிப் பரவின
உடலெங்கும்
நெல் மணிகள்……!

பிரசவங்கள்....!

இந்தக்
கட்டிலில் தான்
நானும் பிறந்தேனாம்….
என் தாய் சொன்னாள்…!
பின்பு இதை
எத்தனையோ
பூச்சிகள்;
எலிகள்;
பூனைகள்
பிரசவ விடுதியாக்கின…..

பின்பு ஒரு நாள்
அதன் சட்டங்களையும்
பலகைகளையும்
‘அவர்கள்’
காவிப் போயினர்…….
பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தது.…
‘அவர்கள்’ ஏதோ ஒரு
பிரசவத்திற்கு
தயாராகியிருந்தனர்……...

Wednesday, May 27, 2009

முடிந்ததும் முடியாததும்……

புகார் போகாத
அந்தப்
புலரிகளில்
விழித்து
வெளியேறிய போது
புலராத மீதிகளாய்
புகார் கட்டிகளாய்
தெரிந்த
கறுப்பு உருவங்கள்
சுற்றி வளைத்து,
சாய்த்து,
சாரியாய் நிற்க வைத்து,
ஒவ்வொன்றாய்
தலையசைத்து,
தட்டித் தடவி
விடும் வரை
காத்திருப்பு……...
கடிகாரமும்
கண்களுமாய்……
சுய விருப்பின்றி…..

பின்பும் அப்படித்தான்……
கால்கள் கடுக்க….
ஆனால்..,
அவர்களாகவே…….!


பின் இணைப்பு;

எதிர்ப்பு போராட்டங்கள்,
பேரணிகள்,
பகிஷ்கரிப்புகள்,
கடையடைப்புகள்,
வேலை நிறுத்தங்கள்,
நிர்வாக முடக்கல்கள்
எல்லாம் ஈற்றில் ஒடுங்கின…..,
பரமேஸ்வரன் கோவில்
கூட்டுப் பிரார்த்தனையாய்……..!!

நவீன இராமர்கள்....

தெரிந்தோ
தெரியாமலோ
இதயத்து அறைகள்
அசோக வனம் ஆகின…..
ஆனால்.....
வாயு மகன்,
வாலி மகன்
தேடி வரவில்லை;
இராகவனும்
யாரையுமே
தூது விடவில்லை….!

பிந்திய செய்தி…..;
அவனும் ஒரு
அசோக வனத்து
உரிமையாளனாய்….....!!

மாசுக்கள்...!

நீங்கள் மட்டுமல்ல
சகோதரிகளே…...
ஆற்று நீரும்
காற்றும் கூட
வேற்றுடையில் தான்
வருகின்றன.....,
நகருக்குள்....!
யாரிடமிருந்து
யார் கற்றீர்கள்…..?

Wednesday, May 6, 2009

உனது பிரசன்னம்...!


புரட்டப்பட்ட
புத்தகத்தின்
பல நாள் ரேகை படிந்த;
கடந்து போக முடியாத
பக்கங்களிலும்.....

ஒரே பக்கத்தில்
மீள மீள வாசிக்கப்படும்
பந்திகளின் இடையேயான
முற்றுப் புள்ளிகளிலும்.......

படுக்கையறையின்
மேல் முகட்டில்
படர்ந்த
ஒட்டறைகளிடையே
பார்த்துப் பழகிப் போன
பொட்டுப் பூச்சியின்
தரிப்பிலும்.......

மூடப்படாத
கண்களால்
மூன்று நேரம்
தரிசிக்கப்படும்
பெண் சாமிப் படங்களிலும்......


ஏதோ ஒரு
முக்கிய தேதிக்குப் பின்,
கிழிக்கப்படாமல்
தொங்கும்
நாள் காட்டியின்
தேதி எழுத்துகளிலும்.....

இருந்து கொண்டேயிருக்கிறது
உன் பிரசன்னம்......!