Friday, November 27, 2015

துயின்று எழும் தூயவர்கள்......!

கால நதி  கண் முன்
       கடந்து நகர்கையிலும்,உங்கள்
கனவு வெளி மட்டும்
       நீண்டு விரிகிறது............

சொல்லாயிரங்களிலும்
      சிக்காத ஈகையுடன்
பல்லாயிரங்களாய்
      புதையுண்டு போனவரே .......

விதைகளாய் முளைத்து
      விழுதெறிந்த செய்தியினைக்
கதைகளாய்க்  கேட்கும்
       கட்டிளமைச் சந்ததியாய்
மீள்பிறப்பின் கட்டியமோ.....
      ரயில் கடவை மீதொளிர்ந்த தீபம்.....?

Saturday, September 26, 2015

விழாக்கால கொள்வனவு....

விழாக்காலத்து
விற்பனைத்தெரு ஒன்றில்......
விழிகளைக்கொடுத்து
இதயம் வாங்கிப்போனாள் ஒருத்தி...;
விலைகள் ஏதும் கொடுக்காமல்.....!

செவ்வொளி சிந்தும்
கண்ணாடி ரோஜாக்கு
விலை கேக்கிறான் அவன்.......!

Wednesday, September 23, 2015

சரித்திரத்தில் சரிபாதி நீ....


நீ உன் வயிற்றில் தீ மூட்டினாய்...
தீவின் திசைகள் எங்கும் பற்றிக்கொண்டது,
அகிம்சை அக்கினி......!

கனன்ற தீயின் சூரிய ஒளியில்
களையிழந்து போயிற்று ,
காந்தீய தீபம்....!

அகண்ட தேசத்தின்
இருண்ட குகைகளில் தெறித்த
உன் அகிம்சை ஒளியில் மின்னின ,
நரிகளின் விழிகள்.....!

 யுத்த யுகம் பேசும் நாளைய சரித்திரத்தில் ,
மொத்தத்தில் சரி பாதி,
நீயும் உன் மார்க்கமும்....!!

மீதிக்குள் பதிவுறும்
போரும் போர் குற்றங்களும்......