Saturday, March 28, 2009

இழந்த நெஞ்சுரம்....!


வானம் தீ உமிழ்ந்து
வாரி இறைப்பது போல்
வானில் கரும் பறவை
சாகசங்கள் காட்டியது......
ஊனமுற வைப்பதனால்;
உயிர் குடித்து உடலத்தை,
தானமென மண்ணில்
தொகை தொகையாய்
குவிப்பதனால்
உவகையுறும்
எண்ணமுடன்
ஊழிக் குரல் எடுத்துக்
கூவின அக்
கொலைக் கணைகள்.......

குஞ்சு குருமன்கள்
குருத்தினிலே கருகலுற,
பஞ்சுப் பொதி தீயில்
பற்றியது போல்
தேசம்.....!

நஞ்சுப் புகையில்
நாசி நனைவுற்று,
வெஞ்சமரின் கோரத்தில்
வேகியது அவர்
சுவாசம்.....

சொந்த இடம் நகர்ந்து,
தொலைவாகிப் பலநாளாய்
அந்தமில் பயணத்தில்
ஆயிரம் இடம் மாறி,
சந்திர வெளியே
சத்திரமாய் அவர்
வாழ்வு..........

சாக்கணத்தை எதிர்நோக்கி,
ஏக்கமுடன்
உயிர் வாழ்க்கை......

இருந்தாலும்,நெஞ்சத்தின்
இறுமாப்பு
இழக்காமல்
எம் தேசம்;
எம் வாழ்வு;
எம் மானம்
என எண்ணி....,
நம்பிக்கை என்ற
நன் மரமாய் வேரூன்றி,
நெஞ்சு நிமிர்த்தி
நின்றார்;விழவில்லை.....!

தம் வாழ்வைக்
காக்கும் கரங்களினால்
துணிவுற்றார்...!

இருந்தாலும்
நெடும் போரின்
துயரம் வலுவுற்று,
பட்டினியால், பச்சைக்
குழந்தைகளைப்
பலியிட்டு..,
பெரும் வடுக்கள் மாற்ற
மருந்தின்றி
மடிந்திட்டார்.....


அவலத்தின் கடும்
வலியால்
ஆவி நலிவுற்று,
வேறு வழியின்றி
விடை பெறும்
முடிவுற்றார்.....!

மண் தொட்டு வணங்கி-தாய்
மடியென்று கண் கலங்கி
புண் பட்ட உடலங்கள்
சுமந்து முன்
நகர்ந்தார்

பல நாள்கள் துவைக்காத
வேட்டி கிழித்து
வெறும் கையை
மேலுயர்த்தி
வெறுப்புற்ற வாழ்வின்
கடும் பயணம் தொடங்கியது
**உயிர்குடிக்கும்
வேகம்-கால்கள

திசை
தடுக்கும்
தொல் நோக்கம்
முதுகு துளைத்து
மார்பூடு வெளியேற
முன் நோக்கி சாய்ந்தார்
முழுத்துயரும் முடிவுற்றார்.....!!

Saturday, March 21, 2009

விழி தூவி விடைபெறுதல்.....


காதல் என்ற
நிச்சயமற்ற விண்ணப்பத்தால்
கிழித்தெறியப்பட்ட
நட்பு என்ற
நிரந்தர உடன் படிக்கை.....!

மிக ஆழமான
செவிமடுப்பில்
கிரகிக்கப்படும்
அந்தகார
ஓசைகள் போல்....,
எனக்குள்
நான் மூழ்குகையில்
வெளி வரும்-உன்
சலங்கைச் சிணுங்கல்கள்....!

உன்னையும்
என்னையும்
சுமந்து பயணிக்க
இன்னும்
பேருந்துகள் வரும்....!

ஆனால்.....,

வழி இலக்கங்கள்
வெவ்வேறாக......!!

துணை....!

ஒளியின்
சலனமற்று நீளும்
இரவு.......;

மனித வாசனைகள்
தொலைவாகிப் போன
அடர் வனம்.......;

இருதயம் முடுக்கும்
விசித்திர, அமானுஷ்ய
ஓசைகள்.......;

இடமும் வலமுமாய்
கோர்க்கப்பட்ட
பத்து விரல்கள்.....;

நம்பிக்கையில்
நகரும்
நான்கு பாதங்கள்..............
***
மூலமறியா முரண்...
**
விடுவிக்கப்பட்ட விரல்கள்..;
இரண்டு பாதங்கள்...
*
இருள்.............