Wednesday, June 5, 2013

துடுப்பிழந்த படகு!





நாங்கள் நதிகளை நடந்து கடந்தோம்
நட்சத்திரங்களை எண்ணிச்சிலிர்த்தோம்
நீண்டு விரிந்த தெருக்களின் மீது
நிலவொளியில் எம் பாதம் நனைத்தோம்...

எங்கள் கரங்களில் மானம் இருந்தது...;
எங்கள் தோள்களில் பாரம் இருந்தது....

நட்ட நடுநிசி நேரத்தில் கூட
நங்கையர் தெருவினில் நடக்க முடிந்தது...
பட்டப்பகல் போல் இரவினில் கூட
பயமின்றி பல மைல் போக முடிந்தது....

கிட்டக்குரைக்கிற நாயொலி கேட்டு
துட்டர் என்றெண்ணும் இன்று போலன்றி
தீரர் என்றெண்ணி துணிந்து கண்ணை
மூடிக்கிடக்க முடிந்தது அந்நாள்........

எங்கள் சிரங்களில் மிடுக்கு இருந்தது;
எங்கள் படகுக்கு துடுப்பு இருந்தது.....!

தாமே துணிந்தவர் இருக்கும் வரைக்கும்
தூய்மை இருந்தது, தானை வரைக்கும்!
துணிய வைத்தவர் துலங்க மறுக்க;
தெருவில் கண்டவர் ஓடி ஒழிக்க;
பெருமை மாறி பிணியென உணர
மனதுகள் துணிந்தது கசக்கும் நிசம்தான்...!

அறுவடை மீது பங்கும் வேண்டும்
அடுத்தவன் மகனே அறுக்கவும் வேண்டும்
என்ற மன நிலை வந்ததன் பின்பும்
தன் பிடி தளர்த்தத் தயங்கியதாலோ.....
கால நீட்சி காலனாய் மாறும்
கொடுமை உணரத்தவறியதாலோ....
'ப்ரூடஸ்கள்' அருகினில் கூட இருக்க
அரசவை நடத்திச்சென்றதனாலோ....

எங்கள் படகு துடுப்பை இழந்தது...
அலைக்கும் கடலில் ஆடிக்கிடக்குது....!!