Wednesday, March 5, 2008

இதய பாசை...


இதயங்களால்
பேசப்படுவதான பாசை,
காற்றலைகளின்
ஒவ்வோர் அணுவிலும்
கலந்து பரவுகிறது.......

'இழை மணிகளின் தாய்' என
இன்றைய விஞ்ஞானம்
ஏற்றுக்கொள்பவளும்
உலகின் முதல் பெண்ணாய்
பைபிள் சொல்பவளுமாகிய
ஏவாளின் காலத்திற்கு முன்பும்
அதன் நிலவுகை பற்றி
பேசலாம்...

இதயங்கள் தோன்றியபோதே
பேசத்தெரிந்திருந்தது
அவற்றிற்கு....

மருத்துவிச்சியின் கிள்ளலில்
முதல் மூச்சு விடும்
புதுப் பூவிற்குத் தெரிந்த
தாயின் குரலாய்....,
தாயிற்கு மட்டும் புரியும்
கிள்ளை மொழியாய்....,
தனித்துவங்களோடு
பயணிக்கிறது,
இதய பாசை....!

பழக்குவிக்கப்பட்ட புறாக்களின்
இறக்கைகளின் துடிப்பிலும்
பழமையான
காகித மடிப்புகளிலுமான
நிலவுகைகள் மறைந்து,
பின்பு....

சட்டைப்பைக்குள்
சிணுங்கிச்சிரிக்கும்
குறுந்தகவலாய்....,
இணையத்தில்
இறக்கை கட்டிய
வார்த்தைச் சரமாய்.........

எல்லாமும்
செயலிழந்து போன;
மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து......,
கடல்களும்
கடும் காவல்களும்
கடந்து பரவும்.....,
கோடிக்கணக்கான
சுவாசங்களுக்குள்,
உனது நாசிக்கு மட்டும்
சொந்தமானதை
வகை பிரித்தறியும்
பிரயத்தனத்தில்
எனது இதய பாசை.......!