Thursday, June 7, 2007

இருப்பு...



எம்மை பொலிஸ்
பிடித்துப்போகும்...!
இன்றிரவோ-நாளை
விடியலிலோ
இது நடத்தல் கூடும்....!

பல் துலக்கிக்
காலைக்
கடன் கழியா முன் வந்து
பஸ் ஏற்றிப்போவர்,வலிந்து...!

கட்டாத காலி,
களையகற்றல் எனப்பகர்ந்து,
திட்டாத திட்டால்
திசைகள் சுழல,வசை
கொட்டாது கொட்டி
'கொட்டி' என கதை விடுவர்...!

தொட்டாலே மட்டும்
தொலையும், நம் உரிமை;
முட்டாத மட்டும்
மீறுவதாய் அமையாது!

விட்டு விடு...-இனியும்
விட்டு பிடி...!

விசாரணை முடியும் வரை
'கம்பிக் கணக்கை'
கணித்துக்கொள்....!

சந்தேகத்தின் பேரிலோ,
வந்திங்கு தங்கியதை
பொலிசில் பதியாத
காரணமோ
எதுவானாலும்
சில மணிகளேனும்
சிறை வாசம் கூடி வரும்..!

குற்றம் ஒன்றும்
தேவை இல்லை,
தமிழனாய் இருந்தால்-
சிறைக்குதகுதி
தானாய் வரும்...!

'குடு'க் காரன் -கஞ்சா,
கசிப்பு கடத்தியவன்
கூட்டாளி என்பான் உன்னை...!
கூட்டுக்குள் மட்டும்
சமத்துவம் இருக்கும்-எதிர்
பேசாதே,-மானம்
போகுதென்று
கூசாதே...!
'இலது உளது ஆகாது,
உளது இலது ஆகாது;
உள்ளதிலிருந்தே
உள்ளது தோன்றும்!'

கழுத்தெலும்பு
முறியும் வரை
காட்டு
மறு கன்னத்தை!

ஆடைகள் நீக்கி,
உடலில்
பயிற்சி அடையாளம்
பார்ப்பர்...!
'அம்மைப்பால்' குத்தாதே
தமிழா,- உன்
குழந்தைக்கு...!

கம்பிகளின் முன்னணியில்
உன்னை யாரும்
புகைப்படம் எடுக்கப்போவதில்லை..!
எடுத்தால்,
நாளை நீ
தேர்தலில் நிற்பாய்!
மக்களுக்காய்
சிறை சென்றதாய்
கதை அளப்பாய்...!

எம்மை பொலிஸ்
பிடித்துப் போகும்....!
நள்ளிரவில் கூட
இது நடக்கக்கூடும்...!

தலை நகரில்
உனக்கென்ன தொடுப்பு?
விடுதிகளில்
என்ன ஒரு தரிப்பு?
வெளியெறு
வேலையற்ற தமிழா...!
இல்லையேல்,
அதி காலைகளில்
வலிந்து ஏற்றப்படுவாய்!
அப்போது.....
நழுவி,
ஆற்றில் குதி...
கடலில் அது உன்னை சேர்க்கும்...

எதாவது கப்பல் வரும்
ஏறிக்கொள்...!

கரையேற
வேண்டுமென்றால்...,
கப்பல் ஓட்டத்தான் வேண்டுமாம்;
ஒவ்வொரு தமிழனும்....!!

8 comments:

Anonymous said...

What extent can we tolerate this suffering!!!We do not know!!!!They keep silence!!!why these all???who can answer for us!!!are Tamils slaves or sin!!!


Good poem!!!
from Aatharshan - eelatamils.com

Anonymous said...

Lovely poem. Its surely your best. I got so emotional after reading it. En ulmanasil irukkum valiyai un kavithayil paarkiren!Thangal padappulaga vaalkaiyil vetripera en vaalthukkal!

Anonymous said...

nice lines
good luck to continue..........
god bless u...

கவி ரூபன் said...

சாரங்கன் அருமையான கவிதை... சரளமான நடை... ம்... வாசிக்க நல்லா இருக்கு ... நிஜம் சுடுது... குறிப்பா...

//
ஆடைகள் நீக்கி,
உடலில்
பயிற்சி அடையாளம்
பார்ப்பர்...!
'அம்மைப்பால்' குத்தாதே
தமிழா,- உன்
குழந்தைக்கு...!
//

மேற்கண்ட வரிகள்... என் அனுபவமும் அதே...

ஒரு சின்ன சந்தேகம் தமிழ் கவிதைக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டல் இடுகிறார்களே...

Anonymous said...

கவிதை அருமை அதன் நடை
விருவிருப்பு கருத்துகள் எல்லமே
அருமையாக உள்ளது

sukan said...

தலைநகரில் தமிழர் படும் அவலத்தை உணர்வுடன் கண்முன்னே விரிக்கின்றது உங்கள் கவிதை.

வேல் சாரங்கன் said...

உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆதர்ஷன், அனொனி1, அனொனி 2, அனொனி 3, கவிரூபன் மற்றும் சின்னா..... நேரம் கிடைக்கயில் மேலும் வந்து செல்லுங்களேன்....

ஆம் கவிரூபன்...
தமிழ் கவிதைக்கு ஆங்கில விமர்சனம்.... தட்டச்சு சிக்கல்... தீர்ப்பதற்கு பல இணைய வழிகள் உண்டு....
தெரியாதவர்களுக்காக..
http://ezilnila.com/tane/unicode_Writer.htm

Anonymous said...

நண்ப!
உண்மை ஆனால், நீ அறிவாய் அதன் தன்மை!
பனி தொடர வாழ்த்துக்கள் அன்பு நண்பா!