Thursday, May 17, 2007

பேசப்படாத படுகொலை....!




கவி பல கண்டது மரம்....!
கவிதைகள் வெறும் பூக்கள்
மாலை தொடுங்கள்
காவியமாக.....!

மரம்
மிகப்பெரியது;
மனிதனை விடவும்....!

உயிர் மட்டுமல்ல
மனமும் உளது மரத்திற்கு...;
கொடை மனம் மட்டும்....!

நேற்று என் வளவில்
நெற்றி நிமிர்த்தி
காற்றிசை செய்தது மரம்...

கீழ்த்திசைக் கதிரொளி
பட்டுத்தெறிக்க,
பொட்டொளி சிந்த
புலர்ந்தது பொழுது....

புட்கள் அதன்மிசை உட்கார்ந்திருந்து,
பூபாளம் இசைத்திடப்
புலரும் பொழுதில்
எத்தனை நெட்டிகள்
நாம் முறித்திருந்தோம்.....!

முன்னர் என் பேரன்,
நீட்டி நிமிர்த்தி
முற்றத்து நிழலில்
முறுவலித்துறங்கிட
நிழல் கொடுத்திருந்ததும்
இந்த மரம் தான்.....

எந்தையும் தாயும்
தம் பெயர் பொறித்து
இன்புற இரசித்ததும்
இந்த மரம் தான்......

தாழ்வுற வீசிய
தடித்த கிளையில்
தாங்கியிருந்தது
ஊஞ்சலோடு என்னை.....

பக்கத்து வீட்டுப்
பையன்களோடு
பசு புலி ஆடப்
பார்த்துஇரசித்தது.....

இன்னும் இதற்கு
எத்தனை கதைகள்....!

எத்தனை எறிகணை
தாங்கித் தடுத்தது....!

தெரு விஸ்தரிப்பு
திட்டம் வருகையில்,
வேலி எங்கள்
வீட்டை நெருங்கிற்று...!
மரம் மிக நகர்ந்து,
தெருவிற்கு போயிற்று....!!

நாள்கள் எண்ணத்
தொடங்கிற்று
நம் மரம்....!

வீதி ஏனோ,
குன்றும் குழியும்...!
இருந்தும் கூட,
விதி விடவில்லை;
மரத்தைக்கூட....!

பாதுகாப்பென்றது
'பெரிய' தரப்பு...!

'பதிவுறு கிளைகளில்
பெட்டிகள் வடிவில்
பொருத்துவர்;
வெடித்தால்,
பெரும் துயர்'
என்றது....!

ஒரே தினத்தின்
இரு மணித்துளிகளில்
இறையடி சேர்ந்தது
மரம்.....!

எங்கே உளது
'மர உரிமை ஆணைக்குழு'...?

மரம்
மிகப்பெரியது;
மனிதனை விடவும்...!

இதை விட நண்பா,
நானும் நீயும்
இறந்தே இருக்கலாம்
'கிளை மோர்' வெடியில்....!!

நம் போல் மனிதர்
பிறப்பது சுலபம்...!!!

4 comments:

Unknown said...

Very nice, I enjoyed it!

வேல் சாரங்கன் said...

Thanks a lot for Shanavi,navaaa and dawn to leave their comments and wishes on my blog and also i am thanking Mr.S.P Nirmanusan who has sent encouraging mails to me.

Anonymous said...

Hi, Yes, we ever talk only killings and abduction!!!but, we also lose many our deepest unmeasurable things!!!we lost many things within a short period!!!we do not know its end!!!!anyway.....try to give best more!!!

Unknown said...

Hey,
Me again. This one perfectly shows the current situation.
Nice....