Wednesday, May 9, 2007

பயம்..!


நிலவு சிந்திய
ஒளியின் துளிகள்,
மரக்கிளை தழுவி
நிலத்தில் வடிந்தன...
காற்று இரைந்தது...;

தூர திசையில்
துவக்கு வெடிகள்
அமைதி கலைத்தன...

'அசோக்கா' மரத்து
இலை குழை மறைவில்
'நத்து' ஒன்றிருந்து
'நக் நக்' என்றது....

எங்கோ தொலைவில்
நீள் வால் குருவி
நிசப்தம் கலைத்தது...

ஊழிக்குரலென
நாய்கள் கூடி
ஊழையிட்டன...

'பேரழிவு' என்றது
பேத்திக்கிழவி...!

விடியும்பொழுது..,
வரப்புகளோடு....
சீருடைகள் சில...!

பெட்டைகள் மூன்று..
பாவம் தாய்க்கும்
நாற்பது வயது...
பெடியளும் இரண்டு..

'காடையர்' என்றது
கண்ணுக்கிழவி...

கதவில் தட்டொலி
கேட்கலாயிற்று...!!

No comments: